Publish Date: Fri, 28 May 2021 (10:38 IST)
Updated Date: Fri, 28 May 2021 (10:40 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது பேசினாலே வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,75,55,457 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ, இருமினாலோ மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பேசினாலே பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும், பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும் என்றும், ஆனால் ஏரோசோல் என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.