Publish Date: Thu, 29 Aug 2019 (20:06 IST)
Updated Date: Thu, 29 Aug 2019 (20:10 IST)
காஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநில இளைஞர்களை திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டம் இருந்தது. ஆனால் தற்போது காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அந்த விதியை பழங்கதை ஆகிவிட்டது. இதனை அடுத்து காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய பல்வேறு மாநில இளைஞர்கள் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கார்பென்டர் தொழில் செய்வதற்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சமீபத்தில் சென்றனர். வேலை செய்யும் இடத்தில் அக்கா தங்கை என இரண்டு பெண்களை அந்த இளைஞர்கள் காதலித்து, வேலை முடிந்த கையோடு தங்களது பீகார் மாநிலத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் திருமணமும் செய்துகொண்டனர்
இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பெண்களின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காஷ்மீர் மாநில போலீசார், பீகார் மாநில போலீசாரின் உதவியோடு அந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து காஷ்மீருக்கு அழைத்துச் சென்றனர். தனது மகள்களை அந்த இளைஞர்கள் கடத்தியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அந்த பெண்களின் சம்மதத்தில் தான் இந்த திருமணம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்
ஏற்கனவே ஒரு பக்கம் காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது