50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என கிரிக்கெட்டின் மிகப்பெரிய கோப்பைகளை எல்லாம் கைவசம் வைத்திருந்தாலும் விராட் கோலிக்குக் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதை எட்டும் வகையில் நேற்று கோலி படை ஐபிஎல் கோப்பையைக் கைகளில் ஏந்திவிட்டது.
கோப்பையை வென்ற பின்னர் பேசிய கோலி “இந்த வெற்றி அணிக்கும், அதன் ரசிகர்களுக்குமானது. நான் இந்த அணிக்காக என்னுடைய இளமை, உற்சாகம் மற்றும் அனுபவம் என அனைத்தையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல முயற்சித்துள்ளேன். இறுதியாக அதைப் பெறுவது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் எதிர்காலம் குறித்துப் பேசும்போது “நான் எப்போதும் ஆர் சி பி அணியுடன் இருந்தேன். சில நேரங்களில் நான் வேறு மாதிரி யோசித்த தருணங்களும் உண்டு. ஆனால் என் இதயம் பெங்களூருவில்தான் இருந்தது. நான் ஐபிஎல் விளையாடும் வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன். இன்றிரவு நான் ஒருக் குழந்தையைப் போல தூங்குவேன். என் மடியில் ஐபிஎல் கோப்பை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.