Publish Date: Mon, 01 Apr 2024 (08:42 IST)
Updated Date: Mon, 01 Apr 2024 (08:44 IST)
ஏப்ரல் 1 முதல் அதாவது இன்று முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அந்த கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லாரி உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் ஏழு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குனர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.