Publish Date: Wed, 30 Mar 2022 (12:07 IST)
Updated Date: Wed, 30 Mar 2022 (12:10 IST)
இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கக்கட்டணமும் அதிகரிக்கப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு ரூ.240 வரை சுங்கக்கட்டணம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டண உயர்வுக்கு பல மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பஞ்சாப் விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன.