Publish Date: Thu, 14 Feb 2019 (22:41 IST)
Updated Date: Thu, 14 Feb 2019 (22:57 IST)
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீர்ர்கள் சென்ற பேருந்தை வெடிகுண்டுகளுடன் உள்ள காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்து ஒருசிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது காரை மோதி தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் பெயர் அடில் அகமது தார் என்பதும் இவன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் இருந்தவன் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டதுடன் தாக்குதலுக்கு முன் அடில் அகம்து தார் பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் அடில் அகமது கூறியதாவது:
"எனது பெயர் அடில், நான் சமீபத்தில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்தேன். இந்த அமைப்பில் சேர்ந்த ஒருசில மாதங்களில் இந்த தாக்குதல் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன்.. இதுதான் காஷ்மீர் மக்களுக்கு எனது கடைசி மெசேஜ்" என்று கூறியுள்ளான். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.