Publish Date: Wed, 11 Mar 2020 (13:21 IST)
Updated Date: Wed, 11 Mar 2020 (15:02 IST)
கொரோனாவிற்கு பலியான முதல் இந்தியர்
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி சுமார் 2,000 பேருக்கும் அதிகமாக பலிவாங்கிவிட்டது. அதுமட்டுமின்றி சீனாவின் அண்டை நாடுகள் உள்பட உலகம் முழுவதும் 100 நாட்களுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் நுழைந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. முதலில் ஓரிருவருக்கு மட்டுமே இருந்த கொரோனா வைரஸ் தற்போது 60 பேர்கள் வரை பரவி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம் ஆகும்.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் 60 பேருக்கு மேல் பரவி இருந்தாலும் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன இந்த நிலையில் திடுக்கிடும் செய்தியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்பவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் நபர் இவர்தான் என்று கருதப்படுகிறது. 76 வயதான முகமது உசேன் சித்திக் ஹைதராபாத் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்றுவந்ததாகவும், சிகிச்சையின் பலன் இன்றி சற்று முன்னர் அவர் மரணமடைந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.