Publish Date: Sat, 16 Jun 2018 (12:00 IST)
Updated Date: Sat, 16 Jun 2018 (12:02 IST)
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது டிராபிக் தான். அதிலும் அலுவலக நேரமான பீக் ஹவரில் வீட்டில் இருந்து ஆபீசுக்கு செல்லும் முன் மக்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. இந்த நிலையில் டிராபிக் பிரச்சனை காரணமாக குதிரையில் ஆபீசுக்கு சென்ற இளைஞர் ஒருவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணிபுரிந்து வருபவர் ரூபேஷ் குமார். இவர் தினசரி அலுவலகம் செல்லும்போது தன்னுடைய வாகனம் டிராபிக் பிரச்சனையால் சிக்கி வருதை கண்டு ஆத்திரம் அடைந்தார்.
இதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து முடித்துவிட்டார். இந்த நிலையில் நேற்று கடைசி நாள் அலுவலகத்திற்கு செல்லும்போது பெங்களூரில் உள்ள டிராபிக் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குதிரையில் அலுவலகம் சென்றார். 'நான் கம்ப்யூட்டர் எஞ்சினியராக வேலை பார்க்கும் கடைசி நாள்' என்ற அறிவிப்பு பலகையை மாட்டுக்கொண்டு குதிரையில் ஆபீஸ் சென்ற ரூபேஷை பலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
குதிரையில் அலுவலகம் சென்றது குறித்து ரூபேஷ்குமார் கூறியபோது, '`பெங்களூருவில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைபார்த்துவருகிறேன். இங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால், காற்று முற்றிலுமாக மாசடைந்து சுவாசிக்க ஏற்றதாக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, குதிரையில் அலுவலகம் வந்தேன். இதற்காக, முறையாகக் குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.