சசிதரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து, "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர் என்பதும், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதையும், நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், சசிதரூர் மற்றும் அவரது குழுவினர் பனாமா, கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, நேற்று கொலம்பியாவுக்கு சென்றனர். அப்போது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது, கொலம்பியா அரசுக்கு சசிதரூர் தனது கண்டனத்தை தெரிவித்தார். பாகிஸ்தானில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இந்தியாவின் நடவடிக்கையின் போது உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு கொலம்பியா அரசாங்கம் இரங்கல் தெரிவித்ததை அவர் கண்டித்தார்.
தற்காப்புக்காக செயல்படுபவர்களுக்கும், தீவிரவாதிகளை அனுப்புபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாமல் உங்கள் நாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனால், அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தர்ம சங்கடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிங்கத்தின் குகைக்கே சென்று, அவர்களுடைய தவறை எடுத்துக்காட்டிய சசிதரூருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.