Publish Date: Fri, 11 Oct 2024 (09:41 IST)
Updated Date: Fri, 11 Oct 2024 (09:43 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு உணர்வுபூர்வமாக இறுதி அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
முதுமை மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கள் அன்று அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாட்டா நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவரது உடல் தேசிய கலை மையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மும்பையில் பல நிறுவனங்கள் நேற்று விடுமுறை அளித்ததாகவும் அதனால் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பார்சி சமூக முறைப்படி இறுதி சடங்கு நடந்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்பட பல தொழில் அதிபர்களும் ஏராளமான அரசியல்வாதிகளும் ஆளுநர்களும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது