Publish Date: Wed, 07 Feb 2018 (15:25 IST)
Updated Date: Wed, 07 Feb 2018 (15:34 IST)
மக்களவையில் பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். ஆனால் அந்த உரையில் பிரதமர் மோடி நாட்டு பிரச்சனைகளை பற்றி பேசாமல் காங்கிரஸ் கட்சியை குறை சொல்வதிலேயே குறியாக இருந்தார்.
பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி செலுத்தி மக்களவையில் பேச தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மோடி அரசுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியவாறே எதிர்க்கட்சிகள் இருந்தன.
ஆனால் மோடி தனது உரையை தொடர்ந்தார். மிகவும் ஆவேசமாக உரத்த குரலில் கோபமாக மோடி பேசிக்கொண்டே இருந்தார். மோடி தனது உரையில் நாட்டுப்பிரச்சனை பற்றி பேசாமல் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமரின் நீண்ட அரசியல் உரையில், ஒரு வார்த்தை கூட விவசாயிகளைப் பற்றி இல்லை. ரபேல் விமான பேரத்தைப் பற்றி பேசவில்லை என கூறினார்.
மேலும், மோடி இந்நாட்டின் பிரதமர், அவர் உரை முழுக்க காங்கிரஸ் கட்சியைப் பற்றி மட்டுமே இருந்தது. அவர் பேசட்டும், ஆனால் அதற்கு பாராளுமன்றம் இடமல்ல. வேலை வாய்ப்பை பற்றி பேச மறுக்கிறார், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச மறுக்கிறார். அவர் பிரதமராக நாட்டின் பிரதமராக பேசவில்லை. ஒரு அரசியல் தலைவராக மட்டுமே பேசியுள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.