Publish Date: Tue, 01 Mar 2022 (18:03 IST)
Updated Date: Tue, 01 Mar 2022 (18:40 IST)
ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று கார்க்கிவ் பகுதியில் காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியாகியுள்ளார்.
அவர் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.