இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்தியுள்ள ஆபரேஷன் மகாதேவ் (Operation Mahadev) தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில் பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனாலும் இந்திய ராணுவம், புலனாய்வு பிரிவுகள் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தன. முக்கியமாக பஹல்காம் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடைய சுலைமான் ஷா என்ற நபரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அவருடன் இருந்த ஜிப்ரான் என்ற மற்றொரு பயங்கரவாதி அக்டோபர் 2023ம் ஆண்டில் சோன்மார்க் சுரங்கப்பாதையில் நடத்த தாக்குதலோடு தொடர்புடையவன் என தெரிய வந்துள்ளது.
தக்க சமயம் பார்த்து காத்திருந்த இந்திய ராணுவத்தின் 24 ராஷ்ட்ரிய ரைபில்ஸ், பயங்கரவாத கும்பல் காஷ்மீரின் டச்சிகாம் தேசியப்பூங்கா அருகே பதுங்கியிருப்பதை கண்டறிந்து இன்று ஆபரேஷன் மகாதேவை அமல்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த ராணுவ தாக்குதலில் சுலைமான் ஷா உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மகாதேவ் மலைசிகரம் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை மையப்படுத்தி ஆபரேஷன் மகாதேவ் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கி, வெடிக்குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் ஏதேனும் சதித்திட்டம் தீட்டியிருந்தார்களா என்பது பற்றி இந்திய ராணுவம், புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K