Publish Date: Sat, 09 Mar 2019 (20:39 IST)
Updated Date: Sat, 09 Mar 2019 (20:41 IST)
மகாராஷ்டிராவில் உள்ள நீரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டதாக செய்தி வெளியயாகியுள்ளது.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.
மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டிய பங்களா, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது.
வலிமையாக கட்டமைக்கப்பட்ட பங்களாவை அதிநவீன இயந்திரங்களை வைத்து இடித்தாலும் மாதங்கள் எடுக்கும், எனவே வேலையை துரிதமாக முடிக்கவே உள்வெடிப்புமுறையை பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லண்டன் நகரில் நீரவ் மோடி இருப்பதாகவும், வீதியில் நடந்துக்கொண்டிருந்த அவரை நேர்காணல் செய்யபோது, அவர் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்றும் பிரிட்டனிலுள்ள டெலிகிராப் செய்தித்தாளின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.