Publish Date: Wed, 26 Sep 2018 (13:46 IST)
Updated Date: Wed, 26 Sep 2018 (13:57 IST)
வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை ஆனால் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெரும்பாலானோர் ஆதார் அட்டயை பெற்றுவிட்டாலும், ஆதார் கார்டு திட்டம் தேவையில்லை என பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர், நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். இதில், ஆதார் கார்டு செல்லும். ஆனால், கட்டாயமில்லை என அவர்கள் தீர்ப்பு வழங்கினர். அதாவது, அதிகப்படியாக பண வர்த்தனை செய்பவரை கவனிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
ஆனால், வங்கிக் கணக்கு, தொலைப்பேசி சிம் கார்டு, கேஸ் இணைப்பு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும், ஆதாரை காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வங்கி கணக்கிற்கு ஆதார் தேவையில்லை. ஆனால், பேன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். பேன் கார்டு இல்லாமல் எந்த வங்கியும் கணக்கு திறப்பதில்லை. எனவே, எப்படிப் பார்த்தாலும் ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு திறக்க முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.