Publish Date: Thu, 26 Oct 2023 (11:37 IST)
Updated Date: Thu, 26 Oct 2023 (11:39 IST)
நாளை மறுநாள் நிகழும் சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் சந்திர கிரகணம் நடைபெறுகிறது. பொதுவாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற சமயங்களில் கோவில்கள் மூடப்படுவது வாடிக்கையான ஒன்று. அவ்வாறாக சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் 8 மணி நேரத்திற்கு நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வருகிற 29ம் தேதி அதிகாலை 1.05 தொடங்கி 2.22 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடையும். கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்னதாக கோவில் நடை மூடப்படுவது வழக்கம்.
அதன்படி 28ம் தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான கோவில் நடை மூடப்படும். 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.