தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பிரசாத், நண்பர்களான 11 வயது யஷ்வந்த் மற்றும் ரவிக்கிரண் உடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வானம் இருண்டு, சூறாவளியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மழையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க, அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்துக்குள் சென்ற அவர்கள் மீது திடீரென இடி, மின்னல் விழுந்தது.
இந்த துயரமான சம்பவத்தில், பிரசாத் மற்றும் யஷ்வந்த் இருவரும் இடத்திலேயே உயிரிழந்தனர். ரவிக்கிரண் தீவிரமாக காயமடைந்து, உணர்விழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், காமரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சுரேஷ், நண்பர் மகேஷுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மழையுடன் இடி மின்னல் ஏற்பட்டது. அதில் சுரேஷ் நேரில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த இயற்கை சீற்றங்கள் மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் இந்தச் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களில் இருக்கும் பழக்கத்தை வளர்க்கும் அவசியம் இந்நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.