பாபர் மசூதியை போல அவுரங்கசீப் கல்லறையையும் இடிப்போம் என பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் இஸ்லாமிய மன்னரான அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. சமீபமாக இந்த கல்லறை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன. முன்னதாக சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஒருவர் அவுரங்கசீப் பற்றி சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசியதால் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மக்கள் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புவதாகவும், ஆனால் அதை சட்டப்படி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேசியிருந்தார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என பேசினார். அதை தொடர்ந்து அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர், அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வோம் என்றும், இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலமாக செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
அவுரங்கசீப்பின் கல்லறையை அரசு அகற்றாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என பஜ்ரங் தள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து அவுரங்கசீப் கல்லறைக்கு எதிரான கருத்துகள் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K