ஜூன் மாதம் கேரளத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த வருடம் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆரம்பிக்கும் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப்புத்தகங்களை தோளில் சுமக்க வேண்டிய அவசியமில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வாரங்களில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, சமூக விழிப்புணர்வை வளர்க்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், போதைப்பொருள் பழக்கம், சுகாதார நலன், சமூக ஊடகங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் பற்றிய விவரங்கள் பகிரப்படும்.
இந்த முயற்சிக்கு காவல்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் நல ஆணையம் மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவ இருக்கிறது. இந்த திட்டம் மாணவர்கள் சமூக சிந்தனையுடன் வளர வேண்டும் என்பதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரியான திட்டத்தை பள்ளித் தொடக்கத்தில் நவீனமாகக் கொண்டு வரும் முதல் மாநிலம் கேரளமாகும். இது கல்விக்கு மேலும் அர்த்தமுள்ள வடிவத்தை தரும் புதிய முயற்சி என கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.