கேரளாவில் மூளைத் தொற்றான 'அமிபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோயால் இன்னொரு மரணம் பதிவாகியுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஷோபனா என்பவர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த நோயால் கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
தற்போது, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த நோயின் அறிகுறிகளுடன் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அசுத்தமான நீரில் இருக்கும் ஒற்றை செல் உயிரியான 'அமீபா' மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த தொற்றானது பொதுவாக அசுத்தமான நீரில் நீராடும்போதோ அல்லது நீந்தும்போதோ ஏற்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, சுகாதாரத்துறை இந்த நோய் சிகிச்சைக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நோயின் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.