Publish Date: Fri, 18 May 2018 (07:51 IST)
Updated Date: Fri, 18 May 2018 (07:58 IST)
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தனது ஆட்சிக்கான மெஜாரிட்டியை 15 நாட்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளதால் இந்த 15 நாட்களிலும் தங்களது எம்.எல்.ஏக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் உள்ளனர்.
எனவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏக்களை கொச்சியில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான தனி விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த தனி விமானத்திற்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டதால் தற்போது எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் கொச்சுக்கு சென்றுள்ளார்களா? அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளார்களா? என்பது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட கட்சியினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் சாலை வழியாக சென்ற எம்.எல்.ஏக்களின் பேருந்து எங்கு சென்றுள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் பாஜகவினர் தீவிரமாக இருப்பதாகவும், எப்படியும் இந்த ஆட்சியை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று பாஜகவினர் இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.