இமாச்சல பிரதேசத்தின் மணாலி பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த கிராம மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தின் நிதி இழப்புகள் குறித்து அவர்களிடம் பேசி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்ற கங்கனா ரனாவத், அவர்களிடம் தனது உணவகத்தின் நிலை குறித்து பேசினார். “நேற்று என் உணவகத்தில் வெறும் ரூ.50 மட்டுமே விற்பனை ஆனது. ஆனால், ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும். தயவுசெய்து என்னுடைய துயரத்தையும் புரிந்துகொள்ளுங்கள். நானும் ஒரு இமாச்சலப் பிரதேசத்தின் பெண் தான், இந்த இடத்தை சேர்ந்தவள்தான்,” என்று அவர் கூறினார்.
மண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கும் கங்கனா, இந்த பேச்சின் மூலம், நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, தன்னுடைய தனிப்பட்ட நிதி இழப்பை குறித்து பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா ரனாவத் இந்த ஆண்டு தொடக்கத்தில் மணாலியில், தி மவுன்டெயின் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த பகுதியில் கனமழையும் நிலச்சரிவும் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை சுத்தமாக இல்லை. எனவே அவருடைய உணவகத்தின் வியாபாரமும் பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.