ஜார்கண்டை சேர்ந்த 20 வயது தொழிலாளி ருஸ்தம் ஷேக் என்பவர், தான் விரும்பிய விலையுயர்ந்த செல்போனை தந்தை வாங்கி தர மறுத்த விரக்தியில், 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.38 மணியளவில் ருஸ்தம் சுமார் ஒரு அடி அகலமுள்ள கிணற்றில் விழுந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு படையினர், ராணுவத்தினர் மற்றும் என்டிஆர்எஃப் குழுவுடன் இணைந்து மீட்பு பணியை தொடங்கினர்.
சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த இந்த மீட்பு பணியில், கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டதுடன், கேமரா மூலம் ருஸ்தமின் நிலை கண்காணிக்கப்பட்டது. இறுதியில், கயிற்றில் கட்டப்பட்ட உலோக கொக்கி மூலம் அவர் வெளியே இழுக்கப்பட்டார்.
அதிகாலை 3 மணியளவில் மீட்கப்பட்ட ருஸ்தம், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். செல்போன் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.