Publish Date: Tue, 17 Dec 2019 (08:39 IST)
Updated Date: Tue, 17 Dec 2019 (08:43 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல மாணவர் இயக்கங்கள் போராடி வருகின்றன. பல இடங்களில் வன்முறைகளும் வெடிக்கிறது.
குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருப்பதால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களை சந்தித்த போது, ”இலங்கை தமிழர்களுக்கு தேவை இரட்டை குடியுரிமை தான், ஜெயலலிதா இருந்தபோதே பொதுக்குழுவில் இது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.