Publish Date: Sat, 28 Dec 2019 (13:00 IST)
Updated Date: Sat, 28 Dec 2019 (13:01 IST)
நித்தியானந்தா கடத்தி சென்றதாக சொல்லப்படும் பெண்கள் தாங்கள் விருப்பப்பட்டு சென்றதாக அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகள்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து பலர் நித்யானந்தா மீது அளித்த புகாரின் பேரில் குஜராத் மற்றும் கர்நாடக நீதிமன்றங்கள் நித்யானந்தாவை கைது செய்ய போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளன.
ஆனால் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதே மர்மமாக உள்ளது. இந்நிலையில் ஜனார்த்தன் தொடங்கிய வழக்கில் அவரது மகள்கள் தத்துவ ப்ரியா மற்றும் நித்ய நந்திதா ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மேற்கு இந்திய தீவுகளில் இருப்பதாக கூறியுள்ள அவர்கள் தாங்கள் இந்தியா திரும்பினால் தங்களது தந்தையால் உயிருக்கு அபாயம் இருப்பதாகவும், விருப்பப்பட்டே நித்யானந்தாவுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் நீதிபதிகள் இதுகுறித்து ஜனவரி 16ம் தேதிக்குள் இருவரும் வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நேரில் சென்று ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.