இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளிடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாக ட்ரம்ப் கூறி வந்தார். இந்நிலையில் இரு நாடுகளும் போரை நிறுத்தியபோது அதை முதலில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் ட்ரம்ப். அதை தொடர்ந்து அமெரிக்காவின் பல மேடைகளிலும் இரு நாடுகளிடையேயான போரை நிறுத்தியது நான் தான் என ட்ரம்ப் பேசி வருகிறார். அடிக்கடி இப்படி பேசி சர்ச்சையை ட்ரம்ப் ஏற்படுத்துவதும் இந்தியா அதற்கு விளக்கம் அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
நேற்றும் அதிபர் ட்ரம்ப் ஒரு பேட்டியில் தான் இல்லாவிட்டால் போர் நிறுத்தம் நடந்திருக்காது என மார்தட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
நெதர்லாந்து ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை மே 10 அன்று பாகிஸ்தான் ராணுவத்துடனான ஹாட்லைன் மூலம் தொடர்புக் கொண்டு நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தத் தயாராக இருப்பதாக பதிலளிக்க அதற்கு இந்தியாவும் பதிலளித்தது. இந்த உரையாடல் இந்தியா - பாகிஸ்தான் இடையே மட்டுமே நடத்தப்பட்டு இரு நாடுகளால் போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
”அமெரிக்கா உட்பட பல நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தபோதும், உண்மையில் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத், புது டில்லி இடையே பேசி முடிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா அமெரிக்காவில்தான் இருந்தது” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K