கேரளாவில் லத்தீன் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில், மாணவி ஒருவர் ஹிஜாப் அணிய வலியுறுத்தியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பள்ளி நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு (திங்கள் மற்றும் செவ்வாய்) விடுமுறை அறிவித்துள்ளது.
பள்ளி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை உள்ள நிலையில், ஆசிரியர் தன்னை ஹிஜாப்பை கழற்ற சொன்னதாக ஒரு மாணவி குற்றம் சாட்டினார்.
கல்வி அமைச்சர் வி. சிவண்குட்டி, "ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சீருடை உள்ளது; மாணவர்கள் அதை பின்பற்ற வேண்டும். இருப்பினும், சீருடையை மறைக்கும் விதத்தில் கூடுதல் ஆடை அணிந்தால் அது பள்ளி நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். பள்ளி நிர்வாகம் முதிர்ச்சியான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
மேலும், மற்ற மாநிலங்களை போல உடையலங்காரம் காரணமாக கேரளாவில் வன்முறை வெடிக்கும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பா.ஜ.க. துணைத் தலைவர் ஷோன் ஜார்ஜ், எஸ்.டி.பி.ஐ.யின் தலைமையின் கீழ் இந்த குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் இங்கு வந்து பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளனர். அவர்கள் பயந்து போய் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இது கேரளாவில் நடக்க அனுமதிக்க முடியாது; அவர்கள் இங்கு இஸ்லாமிய மாநிலத்தை போல ஒரு பகுதியை உருவாக்க முயற்சிக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.