Publish Date: Wed, 21 Aug 2019 (14:31 IST)
Updated Date: Wed, 21 Aug 2019 (14:36 IST)
உத்தரகண்டில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஒன்று தீடிரென விபத்துக்குள்ளானது.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த கனமழையால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாநிலத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோது உத்தரகாசி என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டருக்குள் இருந்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மட்டுமல்லாமல், ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.