குஜராத் உயர் நீதிமன்றத்தில் கருக்கலைப்பு அனுமதி கோரிய மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி பெண் குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
	 
	அகமதாபாத்தை சேர்ந்த சிறுமியின் 35 வார கர்ப்பத்தை கலைக்க அவரது தந்தை நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்றம் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவமனை அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, அக்டோபர் 28 அன்று சிறுமி 2.2 கிலோ எடையுள்ள குழந்தையை பிரசவித்தார். தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
	 
	பிரசவம் நடந்ததால், கருக்கலைப்பு மனு செல்லாததாகிவிட்டதாக அறிவித்த நீதிமன்றம், சிறுமிக்கும் குழந்தைக்கும் புனர்வாழ்வு அளிக்க உத்தரவிட்டது. பிரசவ செலவுகள் உட்பட ஆறு மாதங்களுக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
	 
	சிறுமி விரும்பினால், குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், சிறுமி தனது குடும்பத்துடன் இருக்க விரும்பாத பட்சத்தில், மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரது கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
	 
	மேலும், குழந்தைக்கான இடைக்கால இழப்பீட்டை வழங்கவும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது