Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனிலவு தொடங்கி படுகொலை வரை..! கச்சிதமாக திட்டம்போட்ட மனைவி! - ஹனிமூன் கொலையின் முழு கதை!

Advertiesment
Indore Honeymoon couple

Prasanth K

, வியாழன், 12 ஜூன் 2025 (08:57 IST)

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷியை அவரது புது மனைவி சோனம் மேகாலயாவில் தேனிலவுக்கு அழைத்து சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்த விரிவான பின்னணி….

 

மேகாலயா ஹனிமூன் கொலை:

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கும், சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சுற்றுலா தளமான சோரா எனப்படும் சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலா வீடு ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் மே 24ம் தேதி நோங்கிரியாட் செல்வதற்காக சுற்றுலா வீட்டை காலி செய்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.

 

அதற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதுத்தொடர்பாக அவர்களது வீட்டார் போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது மேகாலயாவில் அவர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

மாயமான மனைவி:

 

ராஜா ரகுவன்ஷியின் அருகே உடைந்த செல்போனும், வெள்ளை நிற பெண் உடையும் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவரது மனைவி சோனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தனிப்படை அமைத்து போலீஸார் மேகாலயாவில் சுற்றுலா ஏஜெண்டுகள், விடுதி உரிமையாளர் என பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் உள்ள் தாபா ஒன்றில் சோனம் கண்டுபிடிக்கப்பட்டார்.

 

கணவரை கொன்றது அம்பலம்:

 

அவரை அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் கூலிப்படைகளை வைத்து ராஜா ரகுவன்ஷியை கொன்றதை ஒத்துக் கொண்டுள்ளார். அதன்பேரில் கூலிப்படையாக செயல்பட்ட விஷால், ஆனந்த், ஆகாஷ் ஆகியோரும், சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாகாவும் கைது செய்யப்பட்டனர்.

 

சோனத்தின் முன்னாள் காதல்:

 

மத்திய பிரதேசத்தில் நல்ல வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் சோனம். சோனத்தின் அப்பா தொழில் அதிபராக உள்ளார். அவர் தனது நிறுவனத்தில் ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பை சோனத்திடம் ஒப்படைத்துள்ளார். அந்த நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்தவர்தான் ராஜ் குஷ்வாகா.

 

ராஜின் குடும்பம் ஏழை குடும்பம். ராஜின் தந்தை தவறிய பிறகு தாய் மற்றும் 3 சகோதரிகளுடன் மத்திய பிரதேசம் வந்தவர் அங்கு சோனம் தந்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ராஜ் சோனத்தை விட 3 வயது இளையவர். 

 

இருவரும் பேசிப் பழகத் தொடங்கிய நிலையில் இது காதலாக மாறியது. இது சோனம் வீட்டில் தெரிய வர இந்த காதலை ஏற்க மறுத்த அவர்கள், சோனத்தை ராஜா ரகுவன்ஷிக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து தனது தாயை எச்சரித்த சோனம் “என் விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைத்தால் அப்புறம் நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்” என மிரட்டியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதை பொருட்படுத்தவில்லை.

 

மேகாலயா கொலை திட்டம்:

 

திருமணம் ஆனதிலிருந்தே ராஜா ரகுவன்ஷி மீது விருப்பம் இல்லாவிட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத சோனம், தனது காதலன் ராஜை அடைவதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளார். ராஜா ரகுவன்ஷியை தீர்த்துக் கட்டி விட்டால் தனது காதலுக்கு இடையூறு இருக்காது என கருதிய அவர் மேகாலயா தேனிலவு ப்ளானை போட்டுள்ளார். அங்கு வைத்து ராஜா ரகுவன்ஷியை தீர்த்துக்கட்ட கூலிப்படைகளை தனது காதலன் ராஜ் மூலமாக அமைத்துள்ளார்.

 

முதலில் கூலிப்படைக்கு ரூ.14 லட்சம் கூலி பேசிய அவர் சில லட்சங்களை அட்வான்ஸாக கொடுத்துள்ளார். மேகாலயா ஹனிமூனுக்கு அனைத்து ப்ளான்களையும் செய்த சோனம் ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை. மேலும் தாங்கள் ஹனிமூன் புறப்பட்ட போதே கூலிப்படையையும் மேகாலயா வர செய்துள்ளார் சோனம்.

 

ராஜா ரகுவன்ஷி படுகொலை:

 

அங்கே அவர்கள் விடுதி அருகிலேயே தங்கிய கூலிப்படையினர் ராஜா ரகுவன்ஷியிடமும் எதேச்சையாக சந்தித்தது போல நட்பாக பேசி பழகியுள்ளனர். ஆனால் கொலை நடப்பதற்கு திட்டமிட்ட சில மணி நேரங்களுக்கு முன்னதாக கொலை செய்ய வந்தவர்கள் பின் வாங்கவே அவர்களுக்கு ரூ.20 லட்சம் தருவதாக ஆசைக் காட்டியுள்ளார் சோனம்.

 

அதன்பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு சிரபுஞ்சி அருவிப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாத பகுதிக்கு ராஜாவை அழைத்து சென்றுள்ளார் சோனம். பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் கோடாரியால் ராஜா ரகுவன்ஷியை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதை அங்கேயே நின்று பார்த்து ரசித்துள்ளார் சோனம்.

 

பின்னர் கூடுதலாக தருவதாக சொன்ன பணத்திற்காக ராஜா ரகுவன்ஷியின் பையில் இருந்த பணம், தன்னிடம் இருந்த தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கழற்றி கூலிப்படையிடம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் எப்படியும் தனது காதலன் ராஜ் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரை மேகாலயாவிற்கு வரவேண்டாம் என்றும், அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் சோனம்.

 

சோனத்தின் பெற்றோர்கள் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்த பிரச்சினையில் ஒன்றுமே அறியாத, புது வாழ்க்கை கனவுகளுடன் சோனத்தின் கைப்பிடித்த ராஜா ரகுவன்ஷி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!