Publish Date: Fri, 03 Apr 2020 (16:21 IST)
Updated Date: Fri, 03 Apr 2020 (16:22 IST)
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக கடந்த சில நாட்களில் பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றாலும் அதன் பின்னரும் நிலமையை அனுசரித்து ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளன. ஐபிஎல் உள்பட பல விளையாட்டுப் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்கு வர்த்தகம் படு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த ஜனவரி மாதம் 40 ஆயிரத்திற்கும் மேல் இருந்த சென்செக்ஸ் தற்போது 27 ஆயிரத்திற்கு வந்துவிட்டது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் 76.60 என உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமாடிட்டி மார்க்கெட் இரவு 11.30 மணிவரை நடந்து வந்த நிலையில் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது
ஏப்ரல் 7 முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பங்கு வர்த்தகம் நடத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்துள்ளது. முன்னதாக காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் பங்குவர்த்தகத்திற்கு விடுமுறை என்பதும் அதனால் ஏப்ரல் 7 முதல் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது