மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மகளை அவரது தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள நெல்கரன்சி கிராமத்தை சேர்ந்த தோண்டிராம் என்பவர் பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது 16 வயது மகள் சாதனா, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வு எழுதியிருந்தார். இந்த நிலையில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கடும் கோபமடைந்த தந்தை தோண்டிராம், மகளுடன் வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் மகளை ஒரு மரக் கைப்பிடியால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி சாதனா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தோண்டிராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.