Publish Date: Tue, 03 Sep 2019 (13:34 IST)
Updated Date: Tue, 03 Sep 2019 (13:38 IST)
வேட்பு மனுவில் தனது பிறந்த வருடம் மற்றும் இடம் குறித்து தவறான தகவலை அளித்த புகாரில் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமித் ஜோகி, சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் ஆவார். மேலும் இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கூட.
இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மார்வாஹி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் அளித்த வேட்பு மனுவில், பிறந்த வருடம் குறித்தும் பிறந்த இடம் குறித்தும் தவறான தகவலை அளித்ததாக, அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாஜக வேட்பாளர் சமீரா பைக்ரா, கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது கடந்த 6 மாத காலம் விசாரணை நடந்துவந்த நிலையில் இன்று காலை அமித் ஜோகி கைது செய்யப்பட்டார். 1977-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த அமித் ஜோகி, தனது வேட்புமனுவில் 1978-ல் சட்டீஸ்கரில் உள்ள சர்பெஹெரா கௌரெலா என்னும் கிராமத்தில் பிறந்ததாக தவறான தகவலை அளித்தார் என கூறப்படுகிறது.