Publish Date: Sat, 29 Feb 2020 (12:47 IST)
Updated Date: Sat, 29 Feb 2020 (13:06 IST)
வேலைக்கு ஆள் இல்லாமல் வாடிக்கையாளர் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த நிதியாண்டு மட்டும் பிஎஸ்என்எல் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு பண பயன்கள் கொண்ட விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:
1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.
இந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. இந்நிலையில் கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். இது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த பணியாளர்களில் 50% ஆகும்.
ஒரே நேரத்தில் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றதால், இப்போது அந்த வேலைக்கு ஆள் இல்லாமல் உள்ளது. எனவே, வாடிக்கையாளர் சேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.