ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை, மாணவிகளின் பெற்றோர்கள் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டபாடு தூர்பு போயமடுகு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் வெங்கையா என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெங்கையாவிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆசிரியர் வெங்கையாவை பெற்றோர்கள் விரட்டி விரட்டி அடித்தனர்.
அடி தாங்க முடியாமல் அந்த ஆசிரியர் சுவர் ஏறி குதித்துத் தப்பிக்க முயன்றார். அப்போது ஒரு மாணவியின் தாயார் விடாமல் விரட்டி சென்று, அவரை கன்னத்தில் மாறி மாறி அறைந்ததாத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அந்த ஆசிரியரை பிடித்துக் கயிற்றால் கட்டி போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்படியும் அவர் பெண்களை தள்ளிவிட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். தற்போது அவரை காவல்துறையினர் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.