Publish Date: Wed, 30 Aug 2023 (13:38 IST)
Updated Date: Wed, 30 Aug 2023 (13:59 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 முறை பாம்பு கடித்தும் மாணவர் உயிர்பிழைத்த சம்பவம் அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலூகா ஹலகார்த்தி என்ற கிராமத்தில் வசிப்பவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இத்தம்பதியரின் மகன் பிரஜ்வல்(11). இவர் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மாதம் ஜூலை 3 ஆம் தேதி வீட்டிற்குப் பின்புறம் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது.
இதையடுத்து பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்தபின்னர், மாணவர் பிரஜ்வல் வீடு திரும்பினார். அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது… இதற்கும் மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினர். இதற்காக அவர் நாட்டு மருத்து சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜயகுமார் – உஷா தம்பதியர் அந்த வீட்டை காலி செய்து, சித்தாப்பூருக்கு இடம்பெயர்ந்து ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். இங்கும், பிரஜ்வலை பாம்பு கடித்துள்ளது. இதற்கும் அவர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த பின்னர், கடந்த 29 ஆம் தேதி 9 வது முறையாக மாணவனை பாம்பு கடித்துள்ளதால் தற்போது அவர் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர்கள் மாணவன் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 முறை பாம்பு கடித்தும் மாணவர் உயிர்பிழைத்த சம்பவம் அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.