இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரின் போது வெடிக்குண்டுகளுக்கு அஞ்சாமல் இந்திய ராணுவ வீரர்களுக்கு லெஸ்ஸி கொண்டு சென்ற சிறுவனுக்கு இந்திய ராணுவம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய நிலையில், இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளான பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் நடந்த இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவம் பஞ்சாப் மாநிலத்தின் தாரா வாலி கிராமம் அருகே முகாமிட்டிருந்தனர். அந்த கிராமம் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளது.
இந்நிலையில் ராணுவ வீரர்களுக்காக அந்த கிராமத்தை சேர்ந்த ஷர்வன் சிங் என்ற 10 வயது சிறுவன் தண்ணீர், லெஸ்ஸி, பால் உள்ளிட்டவற்றை ப்ளாஸ்க்கில் எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணித்து சென்று ராணுவ வீரர்களுக்கு வழங்கியுள்ளான், சிறுவனின் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பாராட்டிய இந்திய ராணுவம் தற்போது சிறுவனை அழைத்து பரிசு வழங்கி பாராட்டியுள்ளனர். அப்போது பேசிய சிறுவன் ஷர்வன் சிங், தான் எதிர்காலத்தில் ஒரு ராணுவ வீரனாக ஆக வேண்டும் என ஆசைக் கொண்டிருப்பதாக கூறியுள்ளான்.
Edit by Prasanth.K