Publish Date: Tue, 16 Jul 2019 (13:57 IST)
Updated Date: Tue, 16 Jul 2019 (14:03 IST)
ஐ ஃபோனை தரமறுத்ததால், 15 வயது சிறுவன், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை-13 ஆம் தேதி, தில்லியின் மோதி நகர் காவல் நிலையத்தில், விக்கி என்ற 15 வயது சிறுவன் காணவில்லை என்று விக்கியின் உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், தில்லியின் தாராபூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு புகார் அளித்த உறவினர்களை அழைத்து ஆய்வு செய்தபோது, அது 15 வயது சிறுவன் விக்கியின் உடல் தான் என தெரியவந்தது. அதன் பின்பு இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் சமீபத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வெகு நேர ஆய்வுக்கு பின்பு விக்கி எவ்வாறு கொள்ளப்ப்பட்டார் என்பதை கண்டுபிடித்தனர்.
டெல்லியின் தாராப்பூர் பகுதியிலுள்ள சாலையில், விக்கி தனது ஐஃபோனை உபயோகித்துக் கொண்டே நடந்து சென்றபோது, 3 சிறுவர்கள் விக்கியின் ஐஃபோனை திருட முயன்றுள்ளனர். உஷாரான விக்கி, தனது ஐஃபோனைத் தர மறுத்த நிலையில், விக்கியை கொலை செய்து ஐஃபோனைத் திருடிச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த 3 சிறுவர்களையும் போலீஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்துள்ள சிறுவர்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஐஃபோனுக்காக 15 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.