Publish Date: Thu, 28 Mar 2024 (12:14 IST)
Updated Date: Thu, 28 Mar 2024 (12:18 IST)
மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதிகள் என இரண்டு இடத்தில் வாக்குரிமை இருப்பதாக அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவரது வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரிகள், அதிமுகவினர் அளித்த புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று செல்வகணபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.