Publish Date: Sat, 30 Mar 2019 (14:53 IST)
Updated Date: Sat, 30 Mar 2019 (14:56 IST)
கரூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதிமுக எம்.பி தம்பிதுரை தேர்தலுக்கு முன்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் தற்போது பாஜகவை புகழ்ந்து வருகிறார். ஏற்கனவே தொகுதிக்கு எந்த ஒரு நலனையும் தம்பிதுரை செய்யவில்லை என குற்றம்சாட்டும் கரூர் மக்கள், தற்போதும் அதே தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை மீது கடும் கடுப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே அவர் காவல் நிலையத்தில் ஒரு பகீர் புகாரை கொடுத்துள்ளார். அதில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எங்களை நோக்கி வந்த இருவர், அமைச்சர் உங்களை பிரச்சாரம் செய்யக்கூடாது என கூறியிருக்கிறார். மீறி செய்தால் கொலை தான் என கூறி என்னிடம் கத்தியை காட்டி மிரட்டினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர் என ஜோதிமணி கூறியுள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் தோல்வி பயத்தில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அடியாட்களை ஏவி விட்டு இருக்கிறார்கள். தம்பிதுரை போகும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். என்னை மக்கள் அன்பாக வரவேற்கின்றனர். அந்த விரக்தியில் தம்பிதுரை எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார் என ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். இதனால் கரூர் தொகுதியே பரபரப்பாக உள்ளது.
webdunia
Publish Date: Sat, 30 Mar 2019 (14:53 IST)
Updated Date: Sat, 30 Mar 2019 (14:56 IST)