Publish Date: Fri, 18 Feb 2022 (16:06 IST)
Updated Date: Fri, 18 Feb 2022 (16:31 IST)
தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என டிடிவி தினகரன் பதிவு.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது என பதிவிட்டுள்ளார்.