Publish Date: Tue, 23 May 2023 (09:46 IST)
Updated Date: Tue, 23 May 2023 (09:50 IST)
உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்களில் முக்கியமான ஒன்றாக வாட்ஸ் ஆப் உள்ளது. முதலில் மெசேஜ் அனுப்பிக் கொள்ள மட்டும் அறிமுகமான வாட்ஸ் ஆப், பின்னர் படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் அனுப்புவது, ஸ்டேட்டஸ் வைப்பது, பணம் அனுப்புவது என சகல வசதிகளையும் கொண்ட இன்றியமையாத அப்ளிகேஷனாக மாறியுள்ளது.
மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வாட்ஸ் ஆப்-ஐ நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை விட்டு வருகிறது. அந்த வகையில் மெசேஜ் அனுப்புவதில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக மெசேஜ் தவறாக டைப் செய்து அனுப்பி விட்டால் அல்லது வேறு நபருக்கு அனுப்பி விட்டால் அதை மொத்தமாக டெலிட் செய்யும் வசதி மட்டுமே இருந்து வந்தது.
இந்நிலையில் அனுப்பிய மெசேஜ் தவறாக இருக்கும்பட்சத்தில் அதை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. இதனால் மெசேஜை மொத்தமாக டெலிட் செய்துவிட்டு மீண்டும் அனுப்ப வேண்டிய சிரமங்கள் குறையும். அதேசமயம் ஒரு மெசேஜ் எடிட் செய்யப்பட்டால் அது எடிட் செய்யப்பட்டது என்பதை மெசேஜ் ரிசீவ் செய்பவர்களுக்கும் காட்டும் என்பது குறிப்பிடத்தகது.