Publish Date: Wed, 06 Jan 2021 (12:11 IST)
Updated Date: Wed, 06 Jan 2021 (12:13 IST)
உலகம் முழுவதும் மெசேஜ் உரையாடலுக்காக அதிகமாக பயன்படுத்தப்படும் வாட்ஸப் நிறுவனம் தங்களது புதிய நிபந்தனையை ஏற்காத கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மெசேஜ் உரையாடலுக்காக மட்டுமல்லாமல் கோப்பு பகிர்தல், வீடியோ, ஆடியோ என அனைத்தையும் பகிர வாட்ஸப் செயலி சுமார் 5 பில்லியன் மக்களுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸப் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் முறையையும் வாட்ஸப் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நிபந்தனைகளை வாட்ஸப் உருவாக்கியுள்ளது. அதன்படி முன்பு எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகள் மட்டும் வாட்ஸப் என்க்ரிப்ட் செய்து சேமிக்கப்பட்ட நிலையில், தற்போது வீடியோ, ஆடியோ மற்றும் இதர கோப்புகளும் இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்பட்டு சேமிக்கப்பட உள்ளன.
மேலும் வாட்ஸப் பண பரிவர்த்தைனை வசதியை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் பயனாளரின் இருப்பிடத்தை பதிவு செய்ய ஜிபிஎஸ் அனுமதியும் கோரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனைகள் பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிபந்தனைகளுக்கான நோட்டிபிகேஷன் வாட்ஸப்பில் வரும் என்றும் அதை ஏற்காத கணக்குகள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.