Publish Date: Tue, 12 Nov 2019 (15:49 IST)
Updated Date: Tue, 12 Nov 2019 (16:11 IST)
வாட்ஸப் செயலியின் முன்னாள் துணை நிறுவனர் ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம் எந்தளவு கை கொடுக்கிறதோ அதே அளவு காலை வாரவும் செய்கிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை தனியாருக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை ஃபேஸ்புக் நிறுவனமே ஒத்துக்கொண்டது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸப்பில் துணை நிறுவனராக இருந்த ப்ரெய்ன் ஆக்டன் ‘பேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிடும்படி’ மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்.
வாட்ஸப் துணை நிறுவனர் பதவியிலிருந்து விலகிய அவர் தற்போது ’சிக்னல்’ என்னும் நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார். இதுகுறித்து கூறிய அவர் ‘பேஸ்புக் தகவல்களை திருடுவது உண்மைதான். வேறு சிலரும் கூட உங்கள் பேஸ்புக் மூலம் உங்கள் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. நானும் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்ததால் எனது பேஸ்புக் கணக்கை டெலிட் செய்து விட்டேன்.” என கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் துணை நிறுவனராக பணி புரிந்தவரே இப்படி சொல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் தரப்போ அவர் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இப்படி போலியான செய்திகளை நம்ப வைக்க முயல்கிறார் என கூறுகின்றனர்.