Publish Date: Fri, 09 Aug 2019 (11:51 IST)
Updated Date: Fri, 09 Aug 2019 (11:53 IST)
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக நிலவிற்பனை செய்யப்படுவதில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடப்பதாக அதன் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் கடந்த சில வருடங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் உள்ளதாக செய்திகள் வெளியாகிப் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் நிலுவையில் இருக்கும் கோடிக்கணக்கான அளவில் உள்ள கடன்களை அடைக்கும் நோக்கத்தில், அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்பிவி என்னும் நிறுவனம் மூலம் செயல்படுத்த நாடு முழுவதும் 63 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அந்த இடங்களின் மதிப்பை அளவிடுவதில் சந்தை விலையை விட மிகக் குறைவாகக் கணக்கிட்டு அடிமட்ட விலைக்கு விற்க முயற்சிகள் நடப்பதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் உள்ள 8 இடங்களின் மதிப்பு 2,753.67 கோடி என பிஎஸ்என்எல் நிர்ணயித்துள்ளது. ஆனால், இவற்றின் சந்தை மதிப்போ 3,867.89 கோடி. இதன் மூலம் சென்னையில் மட்டும் பிஎஸ்என்எல்லின் சொத்துகள் 1,262.89 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.