Publish Date: Mon, 05 Aug 2019 (10:08 IST)
Updated Date: Mon, 05 Aug 2019 (10:10 IST)
ஏர்டெல் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை அடைந்து வரும் வேளையில் தனது 3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாறும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகை மற்ற நிறுவனங்களை ஆட்டம் காண வைத்துள்ளது. ஜியோவின் அசுர வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் மற்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க போராடி வருகின்றன. ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவையையே நிறுத்தி விட்டன. ஜியோவின் வருகைக்கு முன் ராஜாவாக இருந்த ஏர்டெல் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இந்நிலையில் ஏர்டெல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் 4 ஜி சேவையை பலப்படுத்த 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை கடந்த மாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3ஜி சேவைக்கு இதுவரை வழங்கப்பட்ட 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜி சேவைக்குப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் 2 ஜி சேவை வழக்கம்போல தொடரும் எனவும் 3ஜி பயனாளர்கள் அப்படியே 4ஜிக்கு மாறிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களை இழந்தாலும் கணிசமாக அளவில் வருமானத்தை அதிகமாக்க முடியும் என நினைக்கிறது ஏர்டெல். கடந்த 14 ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கடைசி காலாண்டில் முதல் முறையாக ரூ 2,866 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.