Publish Date: Sat, 20 Feb 2021 (00:14 IST)
Updated Date: Sat, 20 Feb 2021 (00:17 IST)
கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்புகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.
அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.