பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் நாளை கொடியேற்றம் தொடங்கி 28ம் தேதி வரை 10 நாட்களுக்கு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
நாளை காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெறும்.
28ம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மாலை வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அதன்பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும், இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்புறம் தீமிதி திருவிழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K