கொங்கு நாட்டில் நாயன்மார்களால் பாடப்பட்ட ஏழு தலங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளை பெற்றது. அருணகிரிநாதர் இதை 'கொங்குராஜபுரம்' என பாடியுள்ளார்.
சூரபத்மனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முருகப்பெருமான் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால், இங்குள்ள மூலவர் திருமுருகநாதசுவாமி என அழைக்கப்படுகிறார். இறைவி ஸ்ரீமுயங்குபூண்முலை நாயகி ஆவார்.
சேரமான் பெருமான் நாயனார் கொடுத்த செல்வத்துடன் திரும்பிய சுந்தரரின் பொருள்களை, சிவபெருமான் வேடுவர் உருவம் கொண்டு கவர்ந்தார். சுந்தரர் பதிகம் பாட, மகிழ்ந்த ஈசன் கவர்ந்த பொருள்களை திரும்பக் கொடுத்து அருளினார்.
இந்த கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள ஆறுமுக கடவுள் ஐந்து முகங்கள் முன்பக்கமும், ஆறாவது முகம் பின்பக்கமாகவும் கொண்ட அரிதான வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருப்பூர்-அவிநாசி சாலையில் அமைந்துள்ளது.