Publish Date: Sat, 10 Sep 2022 (14:52 IST)
Updated Date: Sat, 10 Sep 2022 (14:55 IST)
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும்.
வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம். முதலில் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்து, பின்னர் சத்ய நாராயணர் பூஜை செய்ய வேண்டும். பின்னர் தூபம், கற்பூர தீபம் காட்டி பூஜை செய்யவும். சத்யநாராயணன் பூஜை செய்வதன் மூலம் புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், செல்வம், அதிகாரம், அந்தஸ்து போன்ற அனைத்து வித நன்மைகளும் பயக்கும். பல அருள் நமக்கு கிடைக்கும்.
நாராயணனுக்கு பிடித்தது பால் பாயாசமும், பாசிப் பயறு கஞ்சியும் ஆகும். இதனால் சத்யநாராயணன் பூஜையின் போது இந்த நிவேதனம் படைத்து வழிபடலாம். இப்படி ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் பூஜை செய்தால் நாம் நினைத்தது நடக்கும். கடவுளின் அனுகிரகம் கிட்டும். அதே போல் பெளர்ணமி அன்று சந்திர பகவானுக்கு பூஜை செய்வது நல்லது.
வீட்டின் வெளியே சந்திரன் தெரியும் இடத்தில் நாம் நம்மிடம் வெள்ளி அகல் விளக்கு இருந்தால் அதை ஏற்றலாம். அதோடு சந்திரனுக்கு பிடித்த, வெள்ளை நிறத்தில் உள்ள மல்லிகை பூ, வெள்ளை தாமரை ஆகியவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம்.